அண்ணாநகர்: பைக் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் டாக்டரை அடித்து உதைத்த பக்கத்து வீட்டு வாலிபர் கைதானார். சென்னை முகப்பேர் புகழேந்தி சாலையை சேர்ந்தவர் அசோக்(41). இவர் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் டாக்டராக பணியாற்றுகிறார். இவர் தனது பைக்கை நேற்று வீட்டின் அருகே நிறுத்திவைத்திருந்தார். அப்போது குடிபோதையில் வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த யோகராஜ் (32) என்பவரும் தனது பைக்கை அதே இடத்தில் நிறுத்தியுள்ளார். இதன்காரணமாக அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். திடீரென யோகராஜ் அங்கு கிடந்த பெரிய கல்லை எடுத்து டாக்டர் அசோக் மீது சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து யோகராஜ் அங்கிருந்து தப்பிவிட்டார். டாக்டரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து டாக்டர் கொடுத்த புகாரின்படி, ஜே.ஜே நகர் போலீசார் வழக்குப்பதிந்து யோகராஜை கைது செய்தனர். இதன்பின்னர் அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நிபந்தனை ஜாமீனில் யோகராஜ் விடுவிக்கப்பட்டார்.